பெட்டாலிங் ஜெயா, ஜூன் 12-
உதவித்தொகை வழங்கப்பட்ட டீசல் கட்டுப்பாட்டு முறை - SKDS கீழ், சரக்கு போக்குவரத்து வாகனங்களின் வகைகளை அதிகரிப்பது தொடர்பான விண்ணப்பங்களை, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவீன மீதான அமைச்சு ஆராயவுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோ ஆர்மிசான் முகமது அலி தெரிவித்தார்.
அதே திட்டத்தின் கீழ், பள்ளி பேருந்து, விரைவு பேருந்து போன்ற பொது போக்குவரத்துக்கான அடிப்படை டீசல் ஒதுக்கீட்டை அதிகரிக்கும் பரிந்துரைகளும் பரிசீலிக்கப்படும் என்றாரவர்.
இலக்கிடப்பட்டவர்களுக்கு மட்டுமே டீசல் உதவித்தொகை வழங்கும் திட்டம், கடந்த திங்கள்கிழமை அமலாக்கம் கண்ட நிலையில், டீசலுக்கான விலை லிட்டர் ஒன்றுக்கு 3 வெள்ளி 35 காசாக உயர்ந்துள்ளது.
அதனை அடுத்து, பல்வேறு தரப்பினர் அவ்விரு விவகாரங்கள் தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்துவருவதால், அமைச்சு அம்முடிவை எடுத்துள்ளது.
இதற்கிடையே, டீசல் உதவித்தொகை கிடைக்காதது தொடர்பில் மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்கள் உள்பட அனைத்து வித விண்ணப்பங்களையும் டீசல் உதவித்தொகை அங்கீகரிக்கும் செயற்குழு விரைந்து பரிசீலித்து, அமைச்சரவையின் பார்வைக்கு கொண்டுசெல்லும் என ஆர்மிசான் உறுதியளித்தார்.








