பெட்டாலிங் ஜெயா, மே 02-
இந்திய சமூகத்தினரை அனைத்து நிலைகளிலும் வலுப்படுத்துவதற்காக, ஒற்றுமை அரசாங்கம் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. அது இந்தியர்களை நடப்பு அரசாங்கம் ஒரு போதும் புறக்கணிக்காததை காட்டுவதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
எந்தவொரு சமூகத்தினருக்கும் உதவுவதில் பாகுப்பாடு பார்க்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் கொண்டுள்ளது. குறிப்பாக, பூமிபுத்ராக்களுக்கு அரசாங்கம் உதவ வேண்டும் என்கிற எண்ணத்தில் இருந்த போதிலும் இந்திய சமூகத்தினரை ஒதுக்கி வைப்பதாக பொருள்படாது என்றார் பிரதமர்.
ஆகவே, பூமிபுத்ராக்களுக்கு உதவக்கூடிய திட்டங்கள் மீது இந்திய சமூகத்தினர்கள் ஆத்திரமோ அல்லது பொறாமையோ கொள்வது சரியல்ல.
பல ஆண்டுகளாக இந்திய சமூகத்தினர் குடியுரிமை பிரச்னையை எதிர்நோக்கிவரும் நிலையில், முதல்முறையாக, தமது தலைமையிலான அரசாங்கம், உள்துறை அமைச்சின் மூலம் அவர்களின் அப்பிரச்னைகளுக்கு அதிகம் தீர்வுக்கண்டுள்ளது என்று பிரதமர் அன்வார் கூறினார்.
மேலும், இந்தியர்களின் சமூகவியல் பொருளாதார உருமாற்றுப்பிரிவான மித்ராவுக்கு 100 மில்லியன் வெள்ளி, தெக்குன் கடனுதவி வாயிலாக 30 மில்லியன் வெள்ளி, மலேசிய அமானா இக்தியார் வாயிலாக 50 மில்லியன் வெள்ளி சிறப்பு நிதி என பல்வேறு நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அது தவிர, பெட்ரோனாஸ்-சின் உபகாரச் சம்பளமும், அதில் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளன என்று பிரதமர் அன்வார் அறிவித்தார்.
இந்திய சமூகத்திற்கு அரசாங்கம் ஒன்றும் செய்யவில்லை என தங்களின் சுயநலத்துக்காக சில தரப்பினர், பரப்பிவரும் அவதூறுகளை இந்திய சமூகத்தினர் நம்பக்கூடாது எனவும் நேற்று ஒளிபரப்பட்ட பிரதமருடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பிரதமர் அன்வார் கேட்டுக்கொண்டார்.








