நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கேள்வி பதில் நேரத்தின்போது, வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலத் தேர்தலில் மலேசியர்கள் தாயகம் திரும்பி வாக்களிப்பதற்கான நெகிழ்வுத்தன்மையை வழங்குமாறு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்கிடம் கோரிக்கை விடுக்க எந்தத் திட்டமும் இல்லை என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூருடனான மலேசியாவின் உறவு மிகவும் சிறப்பாக உள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், மற்ற நாடுகளை மலேசியாவின் உள்நாட்டு விவகாரங்களிலோ அல்லது தேர்தல் நடைமுறைகளிலோ தலையிடுமாறு தாம் பொதுவாகக் கோருவதில்லை என்று விளக்கமளித்தார்.
தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பு என்பதால் அதன் முடிவுகளில் தாம் தலையிட விரும்பவில்லை என்றும், எனினும் தனிப்பட்ட முறையில் சனிக்கிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் சிங்கப்பூரில் பணிபுரியும் பல மலேசியர்கள் எளிதாகத் தாயகம் திரும்பி தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற உதவியாக இருந்திருக்கும் என்றும் பிரதமர் அன்வார் இப்ராகிம் சுட்டிக்காட்டினார்.








