கோத்தா பாரு, ஆகஸ்ட்.02-
அண்மையில், தாய்லாந்தில் 5 பாதுகாப்புப் பணியாளர்கள் உயிரிழந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் மலேசியாவுக்கு தப்பி வந்ததாகக் கூறப்படும் தகவலுக்கு இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் கமாண்டர் Datuk Mohd Yusoff Mamat தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக தாய்லாந்து அதிகாரிகளிடம், உண்மையான தகவல் அல்லது ஆதாரம் இருந்தால் வழங்குமாறு மலேசிய போலீஸ் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளந்தான் மாநில போலீசின் சிறப்புப் பிரிவு மற்றும் அனைத்து மாவட்ட போலீஸ் தலைமையகங்களின் கண்காணிப்பிலும், சந்தேக நபர்கள் மலேசியாவுக்குள் நுழைந்ததற்கான எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
தெற்கு தாய்லாந்தில் துப்பாக்கிச் சூடு அல்லது வெடிகுண்டு சம்பவங்கள் நடைபெறும் போதெல்லாம், சந்தேக நபர்கள் மலேசியாவுக்கு தப்பியதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
ஆனால் இதுவரை அதை உறுதிப்படுத்தும் ஆதாரம் எதுவும் எங்களிடம் வழங்கப்படவில்லை என்றும் Mohd Yusoff தெரிவித்துள்ளார்.








