மலேசியாவின் 17 ஆவது மாமன்னராக பதவியேற்றார்
சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கன்டார்
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டின் 17 ஆவது மாமன்னராக மேன்மைத் தங்கிய ஜோகூர் சுல்தான்,சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கன்டார்இன்று பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டார்.
கோலாலம்பூரில் உள்ள Istana Negara, Balairung Seri, சிங்காசன மண்டபத்தில் 264 ஆவது சிறப்பு ஆட்சியாளர்கள் மன்றத்தின் ஆட்சியாளர்கள் முன்னிலையில் 65 வயது சுல்தான் இப்ராஹிம் மாமன்னராக பொறுப்பேற்றார்.
சுல்தான் இப்ராஹிமின் துணைவியார் Raja Zarith Sofiah Sultan Idris நாட்டின் பேரரசியராக அரியணை ஏற்றார். மாமன்னராக சுல்தான் இப்ராஹிமும், பேரரசியராக Raja Zarith Sofiah-வும் நியமிக்கப்பட்டு இருப்பதை Istana Negara அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இச்சடங்கில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு துணை மாமன்னராக மேன்மைத் தங்கிய பேரா சுல்தான், Sultan Nasri Shah-வும் பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டார்.
மாமன்னரின் பதவி உறுதி மொழிக்கான உள்ளடக்கத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாசிக்க, மலாய் ஆட்சியாளர்கள், அரச பேராளர்கள் மற்றும் சிறப்பு பிரமுகர்கள் முன்னிலையில் பதவி உறுதிமொழி பிரகடன கடிதத்தில் சுல்தான் இப்ராஹிம் கையெழுத்திட்டார்.
வரலாற்று சிறப்புமிக்க இந்த வைபவத்தில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் புதல்வரும், ஜோகூர் ரீஜண்டுமான Tunku Ismail உட்பட ஆறு பிள்ளைகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, சுல்தான் இப்ராஹிம், காலை 7.45 மணியளவில் ஜோகூர், Istana Bukit Serena அரண்மனையிலிருந்து புறப்பட்டு, கோலாலம்பூருக்கு புறப்படுவதற்கு ஜோகூர், Senai விமான நிலையத்தை வந்தடைந்தார்.
நாட்டின் புதிய மாமன்னரை வரவேற்கும் சடங்கு, சுபாங், அரச மலேசிய ஆகாயப்படைத் தளத்தில் காலை 9.40 மணியளவில் தொடங்கியது.
கடந்த 1958 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி ஜோகூர் பாரு, சுல்தானா அமினா மருத்துவமனையில் பிறந்தவரான சுல்தான் இப்ராஹிம் , கடந்த 2010 ஆம் ஆண்டு தமது தந்தையார் காலஞ்சென்ற சுல்தான் இஸ்கன்டாரின் மறைவைத் தொடர்ந்து ஜோகூர் சுல்தானாக பதவியேற்றதுடன் இவரின் அரியணை விழா 2015 மார்ச் 23 ஆம் தேதி மிக கோலாகலமாக நடைபெற்றது.








