நெகிரி செம்பிலான், நீலாயிலுள்ள நெடுஞ்சாலையின் ஆர்&ஆர் ஓய்வுத்தளத்தில், உயிரிழந்த நிலையில் போலீஸ் உறுப்பினரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
நேற்று மாலை மணி 5.45 அளவில், பொதுமக்களிடமிருந்து அச்சம்பவம் குறித்த அழைப்பு கிடைத்தாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் மேற்பார்வையாளர் அப்துல் மாலிக் ஹாசிம் தெரிவித்தார்.
உயிரிழந்தவர் கோலாலம்பூரில் பணியாற்றிவரும் 25 வயதுடைய போலீஸ் உறுப்பினர் எனவும் அவருக்கு திருமணம் ஆகிவிட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நெகிரி செம்பிலான் குற்றப்புலனாய்வு துறையின் தடயவியல் பிரிவினர், சம்பவ இடத்தில் மேற்கொண்ட சோதணையில், உயிரிழந்த போலீஸ் உறுப்பினரின் உடலில் காயங்கள் இல்லாததை உறுதிபடுத்தினர்.
அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்ட வேளை, உடற்கூறு ஆய்வுக்காக, சடலம் சிரம்பானிலுள்ள துவாங்கு ஜாஃபார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அச்சம்பவம் குறித்த தகவலறிந்தவர்கள் போலீஸை தொடர்புக்கொள்ளும்படி கேட்டுக்கொண்ட அப்துல் மாலிக், விசாரணைக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில், யாரும் ஆருடங்களை முன்வைக்கக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.








