வரும் மே 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் பாங் சோக் தாவ், தொகுதி மக்கள் நலன் சார்ந்த 5 அம்ச விவகாரங்களை முன்னிறுத்தி முழு வீச்சில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் பட்டதாரியான 31 வயது பாங் சோக் தாவ், தொகுதி மக்களுக்கு நிலையான பொருளாதார வளர்ச்சி, சிறந்த போக்குவரத்து வசதிகள், அதிவேக இணைய சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை உயர்த்துதல் மற்றும் மக்கள் நலனில் அதீத அக்கறை செலுத்துவது ஆகிய அம்சங்களை முன்னிறுத்தி, தமது சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
கோலகுபு பாருவை கடந்த பத்து ஆண்டு காலமாக தற்காத்துக்கொண்டு, சிறந்த சேவையை வழங்கியவர் என்ற பதிவை கொண்டிருந்த டிஏபி-யை சேர்ந்த அதன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த லீ கீ ஹியோங் விட்டுச் சென்ற அபரிமித சேவையை தொடரப் போவதாக பாங் சோக் தாவ் உறுதி பூண்டுள்ளார்.
இந்த இடைத் தேர்தல்,மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தேர்தலாகும். அதேவேளையில் கோலகுபு பாரு தொகுதி மக்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்டுள்ளது.
ஆளும் ஒற்றுமை அரசாங்கத்தின் பார்வையும், உதவித் திட்டங்களும், மேம்பாடுகளும் தொகுதி மக்களுக்கு தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்களித்து, தம்மை வெற்றி பெற செய்யுமாறு தொகுதி வாக்காளர்களை பாங் சோக் தாவ் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.








