புத்ராஜெயா, மே 27-
சுத்திகரிக்கப்பட்ட நீர் மீதான தேவையைக் குறைப்பதில் ஏற்பட்டுள்ள சிரமத்தை தொடர்ந்து, நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசாங்கங்களும் நீர் ஆதாரங்களைத் தற்காப்பதற்கான சிறப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதன் வழி, நீர் தேக்க பகுதிகளை முறையாக கண்காணிப்பதோடு
அவற்றை பாதுகாக்க முடியும் என தேசிய நீர் சேவை ஆணையத்தின் தலைவர் சார்லஸ் சாண்டியாகோ தெரிவித்தார்.
நீர் விவகாரங்கள், மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. அண்மையில், பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் இயோவ் தலைமையில் நீர் பாதுகாப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளதை, இதர மாநில அரசாங்கங்களும் பின்பற்ற வேண்டும்.
நடப்பில், மாநில அரசாங்கங்களின் கீழ் உள்ள நீர் விநியோக நிறுவனங்கள், நீர் சேமிப்பு பரப்புரைகளை மேற்கொள்வதோடு புதிதாக நீர் ஆதாரங்களை தேடி வருகின்றன. அதனால், நீரைப் பாதுகாக்கும் அந்த பரப்புரை சீர்குலைந்துள்ளது.
தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக, நீர் வளம் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருவதால், அனைத்து தரப்பினரும் அதனை உணர்ந்து செயல்பட வேண்டுமென சார்லஸ் சாண்டியாகோ கேட்டுக்கொண்டார்.








