May 22, 2026
Thisaigal NewsYouTube
இந்தியா, சீனாவிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளுக்கான கடும் விதிமுறைகளில் தளர்வு; பெர்சத்து கட்சி எதிர்ப்பு தெரிவித்தது
தற்போதைய செய்திகள்

இந்தியா, சீனாவிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளுக்கான கடும் விதிமுறைகளில் தளர்வு; பெர்சத்து கட்சி எதிர்ப்பு தெரிவித்தது

Share:

நாட்டின் அனைத்து நுழைவாயில்களில், இந்தியா மற்றும் சீனாவிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளுக்கான விதிமுறைகளில் மலேசியா குடிநுழைவுத்துறை தளர்வுகளை வழங்கியுள்ளதாக, சமூக ஊடகங்களில் பரவலாகிவரும் கடிதம் தொடர்பில், பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவான அர்மடா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அந்த கடிதத்தின் உண்மைத்தன்மை குறித்து உள்துறை அமைச்சர் டத்தூஸ்ரீ சைஃபுதீன் நாசூஷன் விளக்கமளிக்க வேண்டுமென அர்மடா தலைவர் வான் அஹ்மத் ஃபய்சல் வான் அஹ்மத் கமல் வலியுறுத்தினார்.

சம்பந்தப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளதன் படி, அவ்விரு நாடுகளிலிருந்தும் வரும் சுற்றுலா பயணிகள், இனி, மலேசியாவில் தங்கவிருக்கும் இடம் குறித்த விபரங்களை வழங்க வேண்டியதில்லை என கூறப்பட்டுள்ளது.

நாட்டின் சுற்றுலா தொழில்துறையை ஊக்கப்படுவத்துவதில் தங்களுக்கு எந்தவோர் ஆட்சேபனையும் கிடையாது. ஆனால், மலேசியாவில் சமூக நல்லிணக்கமூம் பாதுகாப்பும் தொடர்ந்து பேணப்படுவதற்கு உத்தரவாதம் அளிக்க, மலேசிய குடிநுழைவுத் துறை வெளிநாட்டு சுற்றுப்பயணிகளுக்கான கடும் விதிமுறைகளை நிலைநிறுத்த வேண்டுமென வான் அஹ்மத் ஃபைஹ்சல் கூறினார்.

வெளிநாட்டினருக்கான விதிமுறைகளில் தளர்வுகள் வழங்கப்பட்டால், அவர்கள் நாட்டிலிருந்து திரும்ப வெளியேறாமல் போனால், அவர்கள் இருக்கின்ற இடத்தை அடையாளம் காண்பதில், குடிநுழைவுத்துறையினர் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவர்.

கடந்த 2022ஆம் ஆண்டு உள்துறை அமைச்சு வெளியிட்டிருந்த தரவின் படி, சுமார் 1.2 மில்லியனுக்கும் கூடுதலான சீனா நாட்டு பிரஜைகள், அவர்களது தாயகத்திற்கு திரும்பவில்லை. அதனால், நாட்டில், பல்வேறு சமூக பிரச்சனைகள் எழுந்துள்ளன.

கள்ளக்குடியேறிகளாக இந்நாட்டில் வசித்துவரும் அத்தரப்பினர், சூதாட்டம், பாலியல் சேவை, ஆட்கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலைமை இவ்வாறாக இருக்க, அது இன்னும் மோசமடையாமல் இருப்பதை உறுதிபடுத்த, சைஃபுதீன் நசுஷன் உரிய பதிலை அளிக்க வேண்டுமென வான் அஹ்மத் ஃபைஹ்சல் கேட்டுக்கொண்டார்.

Related News