இம்மாதம் 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிலாங்கூர், கோலா குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், பாஸ் கட்சியின் உறுப்பினர்கள், வாக்களிக்கவில்லை என்றால், அது இஸ்லாம் சமயத்திற்கு முரணானதாக கருதப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டத்தோ ஶ்ரீ தகியுதீன் ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமது அக்கூற்று, இஸ்லாமிய சட்டம் இல்லை. இருந்த போதிலும், வரக்கூடிய இடைத்தேர்தலில் தகுதி பெற்ற பாஸ் கட்சியின் வாக்காளர்கள், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் வேட்பாளர் கைருல் அசாரி சாவுட்டிற்கு வாக்களிப்பதற்கான உத்தரவாக அதனை தாம் வழங்குவதாக தகியுதீன் ஹசன் கூறினார்.
தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பது பாஸ் கட்சியின் அரசியலைமைப்பில் கூறப்பட்டுள்ளது.
அதற்கு மதிப்பளிக்கும் வகையில், வருகின்ற இடைத்தேர்தலில், தங்களது குடும்ப உறுப்பினர்கள், அண்டை வீட்டுக்காரர்கள், உறவினர்கள் முதலானோர் கைருல் அசாரி சாவுட்டிற்கு வாக்களிப்பதை, பாஸ் கட்சியின் உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றாரவர்.








