லஞ்ச ஊழல் விவகாரத்தில் சிறைத் தண்டனை பெற்ற முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் முகமட் ஈசா அப்துல் சமத்டிற்கு வழங்கப்பட்டிருந்த டார்ஜா பாங்லிமா செத்தியா மாஹ்கோத்தா விருது மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிமால் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஈசா அப்துல் சமத்டிற்கு வழங்கப்பட்டிருந்த ‘டான்ஸ்ரீ’ பட்டமும் தானாகவே இரத்தாகியுள்ளது.
இது குறித்து பிரதமர் துறை இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நடவடிக்கையானது கடந்த ஜூன் 8 முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தற்போது சுங்கை பூலோ சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ஈசா சமத் குற்றவியல் சட்டத்தின் கீழ், தண்டனை பெற்றதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
டார்ஜா யாங் முலியா செத்தியா மாஹ்கோத்தா மலேசியா சட்டத்தின் 25 மற்றும் 26A பிரிவுகளுக்கு இணங்க, குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றவர்களிடமிருந்து விருதுகள் மற்றும் பட்டங்களை மீட்டுக் கொள்ளும் அதிகாரம் உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த நடவடிக்கையானது, கடந்த 2024-ஆம் ஆண்டு, செப்டம்பர் 7-ஆம் தேதி இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற கூட்டரசு விருது வழங்கும் விழாவில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வழங்கிய அரச ஆணைகளுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








