தனது மகள் வாங்கிய அதிர்ஷ்ட சீட்டுக்குலுக்கில் பரிசுப்பணமாக 17,500 வெள்ளி கிடைத்து இருப்பதாக கூறி, இந்திய மூதாட்டியை அணுகியதாக நம்பப்படும் இந்திய ஆடவர் ஒருவர் சுமார் 5 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள நகைகளை பெற்றுக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டதாக போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.
நெகிரி செம்பிலான், தம்பின், தாமான் இன்டா, ஜாலான் இன்டா-வைச் சேர்ந்த 67 வயது சரஸ்வதி பழனி என்பவர் இச்சம்பவத்தில் தனக்கு சொந்தமான இரண்டு தோடுகள் உட்பட நகைகளை பறிகொடுத்ததாக தம்பின் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
நேற்று முன்தினம் ஜனவரி 29 ஆம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 40 வயது மதிக்கத்தக்க அந்த இந்திய ஆடவர், வீட்டின் வேலிக்கு வெளியே நின்று கொண்டு, வீட்டு முகவரியைப் உறுதிபடுத்துவதைப் போல் நடித்து, இந்த முகவரியில் ஒரு பெண் வாங்கிய அதிர்ஷ்ட சீட்டுக்குலுக்கில் ரொக்கப் பணம் கிடைத்து இருப்பதாகவும், அந்த அதிர்ஷ்டக்குழுக்கு சீட்டை தரும்படி தன்னை அணுகியதாக சரஸ்வதி குறிப்பிட்டுள்ளார்.
ஓர் ஆசிரியரான தனது மகள் பள்ளிக்கு சென்று விட்டதாகவும், அவர் வீடு திரும்பியப்பின்னர் வரும்படி தாம் கேட்டுக்கொண்ட போதிலும்,தனது கைப்பேசியில் தனது மகளிடம் உரையாடுவதைப் போல நடித்து, 17,500 வெள்ளி லாட்டரிப் பணம் கிடைப்பதற்கு தமக்கு கமிஷனாக 3,500 வெள்ளி கொடுக்க வேண்டும் என்றும், வீட்டில் பணம் இல்லை என்றால் அடகு வைப்பதற்கு நகைகளை பெற்றுச்செல்லுமாறு தனது மகள் கூறியதாகவும், தன்னை நம்பவைத்து அந்த நபர், நகைளை பறித்துக் கொண்டு சென்றுவிட்டதாக சரஸ்வதி புகார் கூறியுள்ளார்.
நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினரும், Repah சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.வீரப்பனின் அலுவலகத்திற்கு சென்று தாம் ஏமாற்றப்பட்டது குறித்து சரஸ்வதி முறையிட்டதுடன், அந்த நபர், வீட்டின் முன் வாசலில் நுழைந்த போது, தனது கைப்பேசியை அடைக்கச் சொல்லிவிட்டதால் அடுத்தடுத்த என்ன நடந்தது என்பது குறித்து தனக்கு தெரியவில்லை என்றும் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
வீட்டில் தனியொருவராக இருந்த போது நிகழ்ந்த இச்சம்பவத்தை தொடர்ந்து பொது மக்கள் சற்று எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்திய சட்டமன்ற உறுப்பினர் வீரப்பன், இது குறித்து துரிதமாக விசாரணை செய்யுமாறு போலீஸ் துறையை கேட்டுக்கொண்டுள்ளார்.








