கிளந்தான், மே 08-
கிளந்தான், ஜாலான் பாசிர் பெக்கான்னில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோலை கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட மூன்று நபர்களில் இரண்டு பேர் பெட்ரோல் நிலையத்தின் ஊழியர்கள் என்று தெரியப்படுகின்றது.
நேற்று காலை 9.45 மணியளவில் சம்பந்தப்பட்ட இடத்தில் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சகத்தின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது 30 வயது ஆடவர் ஒருவர் புரோட்டான் வாஜா ரக காரில் பெட்ரோலை நிரப்பிக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டதாக கிளந்தான், உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சகத்தின் இயக்குநர் அஸ்மான் இஸ்மாயில் கூறினார்.
410 வெள்ளி மதிப்பிலான 200 லீட்டர் பெட்ரோலை காரின் எண்ணெய் தாங்கியில் சந்தேகிக்கும் நபர் நிரப்பியிருந்தது விசாரணையில் தெரியவந்ததாக அஸ்மான் இஸ்மாயில் அறிவித்தார்.
இச்சோதனையின் போது 20 மற்றும் 40 வயதுடைய ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டதுடன் மேல் விசாரணைக்காக பெட்ரோல் விற்பனை தொடர்பான சில ஆவணங்களும் அந்நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக அஸ்மான் இஸ்மாயில் இன்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.








