கம்பார், ஜூன் 06-
கம்பார், ஜாலான் தஞ்சூங் துவாலாங்-மாலிம் நாவார் 4 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் டிரெய்லரிலிருந்து தார் கற்கள் சரிந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று இரவு 7.30 மணியளவில் 59 வயது ஹனபியா இஸ்மாயில் என்ற அந்த ஆடவர் தஞ்சூங் துவாலாங் - கிலிருந்து கம்பார் -ருக்கு சென்று கொண்டிருந்ததாகவும் சம்பந்தப்பட்ட டிரெய்லருக்கு பின்னால் சுமார் 10 மீட்டர் தொலைவில் மோட்டார் சைக்கிளில் அவர் வந்து கொண்டிருந்த போது இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் அறியப்படுகிறது.
அவ்விடத்தில், 48 வயது நபர் ஒருவர் ஓட்டிச் சென்ற டிரெய்லரின் இணைப்பான் சேதமடைந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாக கம்பார் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் முகமது நஸ்ரி தாவூத் தெரிவித்தார்.
மேலும், அந்த டிரெய்லரிலிருந்து தார் கற்கள் சாலையில் விழுந்ததுடன் பின்னால் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளோட்டியையும் பதம் பார்த்ததாக முகமது நஸ்ரி இன்று கூறினார்.
விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளை டிரெய்லர் ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பியதாக முகமது நஸ்ரி மேலும் குறிப்பிட்டார்.








