புத்ராஜெயா, மே 06-
பொதுச் சேவையின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசு ஊழியர்களை கண்காணித்து, அடையாளம் காணுமாறு அனைத்து பொதுச்சேவை பணியாளர்களையும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
பணியில் கவனக்குறைவு, சோம்பேறித்தனம், அடிக்கடி வேலைக்கு மட்டம் போடுதல் ஆகிய கட்டொழுங்கு பிரச்னைக்குரிய அரசு ஊழியர்களுக்கு, மற்ற பணியாளர்க்கு கொடுப்பதைப் போன்று சமமாக சம்பள உயர்வு கிடைக்காது என்று பிரதமர் அன்வார் வலியுறுத்தினார்.
உதாரணமாக, ஆசிரியர்களை எடுத்துக்கொண்டால் பள்ளிகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் தங்களின் பொறுப்புகளை சிறப்பாக மேற்கொண்டு வரும் வேளையில் மறுபக்கத்தில் சில ஆசிரியர்களும் பிரச்னைக்குரியவர்களாக இருக்கவே செய்கின்றனர் என்று பிரதமர் கூறினார்.
அதுப்போலதான், அலுவலகங்களிலும். சிறப்பாக கடைமையை செய்து வரும் பொதுச்சேவை ஊழியர்கள் ஒருப்புறம் இருக்க ஊழல், ஒழுக்கமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சில குழுக்களும் இருக்கவே செய்கின்றனர்.
எனவே, பிரச்னைக்குரிய பொதுச்சேவை பணியாளர்களுக்கு சக ஊழியர்களை போல அங்கீகாரங்கள் கிடைக்கப்படாது என்பதை உணர்ந்திட வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.








