மலேசியாவில் வரவிருக்கும் ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில், போலிச் செய்திகளைத் தடுத்து பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கும் புதிய 'விரைவுப் பதில் தேர்தல் முயற்சி' திட்டத்தை மலேசிய ஊடக மன்றம் சோதித்து, செம்மைப்படுத்த உள்ளது.
இது குறித்துப் பேசிய அந்த மன்றத்தின் தலைவர் டான் ஸ்ரீ நளினி பத்மநாதன், "அடுத்தடுத்து நடக்கும் இந்த இரு தேர்தல்களும் எங்களின் புதிய பாதுகாப்பு வழிமுறைகளை நிஜக் களத்தில் சோதித்துப் பார்க்க நல்லதொரு வாய்ப்பாக அமையும்," என்று தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ், ஊடக நிறுவனங்களின் லோகோக்கள் மற்றும் பெயர்களைப் பயன்படுத்தி போலியாக உருவாக்கப்படும் செய்திகள் மற்றும் புகைப்படங்களை சம்பந்தப்பட்ட ஊடக அமைப்புகளே நேரடியாகச் சரிபார்க்கும். இதில் மலேசிய ஊடக மன்றம் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படும் வேளையில், தேர்தல் ஆணையம், பெர்னாமா செய்தி நிறுவனம் மற்றும் பிற தொடர்புத் துறைகளும் இணைந்து உண்மையான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கப் பணியாற்றவுள்ளன என்று டான்ஸ்ரீ நளினி பத்மநாபன் விளக்கினார்.








