புத்ராஜெயா, மார்ச்.25-
கடந்த 2020-ஆம் ஆண்டு பெட்டாலிங் ஜெயாவிலுள்ள முதியோர் இல்லம் ஒன்றில், முதியவர் ஒருவரைச் சுத்தியலால் அடித்துக் கொன்ற இந்தியப் பிரஜை அழகேசன் காமராஜுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று குறைத்துள்ளது.
ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் அழகேசனுக்கு விதித்த 38 ஆண்டு கால சிறைத் தண்டனையை, அப்பீல் நீதிமன்றம் 35 ஆண்டுகளாகக் குறைத்துள்ளது. அதே வேளையில் அவருக்கு விதிக்கப்பட்ட 15 பிரம்படிகள், தற்போது 12-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி, சுகன் கணேசன் என்ற முதியவர் தூங்கிக் கொண்டிருந்த போது, அழகேசன் அவரைச் சுத்தியலால் பலமுறை தாக்கிக் கொலை செய்தாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர் தனது குற்றத்தை ஆரம்பத்திலேயே ஒப்புக் கொண்டதை நீதிமன்றம் கருத்தில் கொண்டது. மரண தண்டனை ஒழிப்புச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் உள்ள திருத்தங்களைப் பயன்படுத்தி, நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை வழங்கினர்.
தற்போது 35 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ள அழகேசனுக்கு, அவர் கைது செய்யப்பட்ட தேதியிலிருந்து தண்டனைக் காலம் கணக்கிடப்படும் என்று அப்பீல் நீதிமன்றம் தெரிவித்தது.








