பினாங்கு, மே 29-
பினாங்கு, நிபோங் தெபால் -லில் உள்ள டயர் கிடங்கு ஒன்றில் சட்டவிரோதமாக செயல்படுத்தப்பட்ட 39 மோட்டார் சைக்கிள்கள் உட்பட 350,000 வெள்ளி மதிப்பிலான உரிமம் பெறாத மதுபானங்களை மலேசிய சுங்கத்துறை கைப்பற்றினர்.
கடந்த மே 13 ஆம் தேதி மாலை 3.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கிடங்கின் உரிமையாளரான 30 வயது ஆடவர் ஒருவரை மலேசிய, பேரா சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் சீனாவிலிருந்து போர்ட் கிள்ளான் வழியாக இறக்குமதி செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த வேளை, அந்த வளாகத்தின் உரிமையாளர் முறையான ஆவணங்கள், இறக்குமதி குறித்த தகவல்கள் உட்பட மேலும் சிலவற்றை சமர்பிக்க தவறியதாக பேராக் மாநில சுங்கத்துறையின் இயக்குநர் டத்தோ அப்துல் கபார் முகமட் தெரிவித்தார்.
இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 135 (1) (d) மற்றும் 32 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அப்துல் கபார் மேலும் விளக்கமளித்தார்.








