போலி ஆவணங்களைப் பயன்படுத்தி 2 கோடி ரிங்கிட் வணிக மூலதன நிதியுதவி பெற முயன்றது தொடர்பான 'ஒப் செகாம்' விசாரணைக்காக, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வங்கி கணக்கிலிருந்த சுமார் 34 லட்சம் ரிங்கிட்டை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் முடக்கியுள்ளது.
நெல் மற்றும் அரிசி கொள்முதல் செய்வதற்காக நிதி நிறுவனம் ஒன்றில் இந்த போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாலிம் அமான் தெரிவித்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டிருந்த நெல் மற்றும் அரிசி கொள்முதல் வணிகங்கள் எதுவும் உண்மையில் நடைபெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 10 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, எஸ்பிஆர்எம் சட்டம் 2009 மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரணை தொடர்கிறது. மேலும், போலி ஆவணங்களைச் சமர்ப்பித்த சந்தேகத்தின் பேரில் நெல் மற்றும் அரிசி உற்பத்தி நிறுவனத்தின் இரண்டு இயக்குநர்கள் உட்பட மூன்று பேர் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 30 வயது மதிக்கத்தக்க செயல்பாட்டு மேலாளர் ஒருவர் விசாரணைக்கு உதவுவதற்காக ஜூலை 11, 2026 வரை ஐந்து நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.








