1எம்டிபி நிதி முறைகேடு வழக்கில் தேடப்பட்டுவரும் தப்பியோடிய நிதியாளர் ஜோ லோ, கடந்த ஆண்டு இறுதியில் சீன பிரதிநிதிகள் குழுவுடன் மலேசியாவிற்கு வருகை புரிந்து, 1எம்டிபி கடனைத் திருப்பிச் செலுத்தும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான தகவல்களை அரசாங்கம் மறுத்துள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான், சரவாக் ரிப்போர்ட் மற்றும் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட தகவல்கள் உண்மையா? என கேள்வி எழுப்பியதோடு, இந்த விவகாரம் மலேசியாவின் இறையாண்மையுடன் தொடர்புடைய முக்கிய விவகாரம் என்பதால் அரசாங்கத்தின் விளக்கத்தைக் கோரினார்.
என்றாலும், அக்கேள்விக்குப் பதிலளித்த துணை நிதி அமைச்சர் லியூ சின் தோங், அக்குற்றச்சாட்டை தான் மறுப்பதாகத் தெரிவித்தார்.
உலக வரலாற்றில் மிகப்பெரிய நிதி மோசடி வழக்குகளில் ஒன்றாகக் கருதப்படும் 1எம்டிபி ஊழல் விவகாரத்தில், குறைந்தது 4.5 பில்லியன் அமெரிக்க டாலர் மலேசிய மதிப்பில் 17.69 பில்லியன் ரிங்கிட் முறைகேடாக கையாடப்பட்டதில் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படும் ஜோ லோ மீது, மலேசியா மற்றும் அமெரிக்காவில் ஊழல், பணமோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனினும், தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்று ஜோ லோ தொடர்ந்து மறுத்து வருகிறார்.
தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இதற்கிடையில், கடந்த மே மாதம் புக்கிட் அமான். ஜோ லோ மலேசியாவுக்கு வந்ததாக வெளியான தகவல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தது.
ஆனால், அந்தக் குற்றச்சாட்டு உண்மையா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








