பேராக் மாநிலம் ஈப்போவில் உணவுப் பொருள் விநியோக நிறுவனத்தில் பணியாற்றும் 31 வயதான பெண் எழுத்தர் ஒருவர், மோசடி கும்பலின் வலையில் சிக்கியதால், அந்த நிறுவனம் 9 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட் இழப்பை சந்தித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட எழுத்தர் நேற்று காலை 11 மணியளவில் போலீசில் புகார் அளித்ததாகவும், அதன் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் முஅலிம் மாவட்ட போலீஸ் தலைவர் காலித் முகமது தெரிவித்துள்ளார்.
சம்பவத்தின் போது, நிறுவன மேலாளரிடமிருந்து வந்ததாக நம்பிய ஒரு வாட்ஸ்அப் செய்தியை எழுத்தர் பெற்றுள்ளார்.
ஆனால், மேலாளரின் கைப்பேசி எண்ணை மோசடிக்காரர்கள் ஹேக் செய்து, அந்த எண்ணிலிருந்தே நிறுவனத்தின் சார்பில் பல்வேறு வங்கிப் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறு எழுத்தருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
அந்த உத்தரவுகளை நம்பிய எழுத்தர், பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டதையடுத்து, அந்நிறுவனம் 9 லட்சத்திற்கும் அதிகமான தொகையை இழந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.








