சரவாக் மாநிலம் பிந்துலுவிலுள்ள சுங்கை தாதாவ் ஆற்றில், தொடக்கப் பள்ளி மாணவர் ஒருவர் முதலைத் தாக்குதலுக்கு உள்ளானது உள்ளிட்ட தொடர் சம்பவங்களால் அங்கு முதலைகளை பிடிக்கும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நேற்று முதல் நாளிலேயே, சுமார் 5 மீட்டர் நீளமுள்ள ராட்சத முதலை ஒன்று பிடிபட்டது.
சுங்கை தாதாவ் மற்றும் தாதாவ் எஸ்டுவரி பகுதிகளில் பெரிய முதலைகள் அடிக்கடி காணப்படுவதாலும், கடந்த காலங்களில் பல தாக்குதல் சம்பவங்கள் நடந்ததாலும் இந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் முதலை வேட்டை நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாக சரவாக் வனத்துறை கழகத்தின் பிந்துலு பிரிவு தெரிவித்துள்ளது.
அதன் படி, மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள முதலைகளை பிடிக்க, பிந்துலு, சிபு மற்றும் தாதாவ் பகுதிகளைச் சேர்ந்த உரிமம் பெற்ற அனுபவமிக்க முதலை வேட்டையாடுபவர்கள் இந்த சிறப்பு நடவடிக்கையில் இணைக்கப்பட்டுள்ளனர்.








