மலாக்காவில் தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் 6 ரோஹிங்கியா ஆடவர்கள் கொண்ட கும்பலை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூன் 15-ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில், சுங்கை ஊடாங் பகுதியில் உள்ள கட்டுமானப் பொருட்கள் கிடங்கில் இருந்து சுமார் 2 லட்சம் மதிப்பிலான அலுமினியம் ஃபார்ம்வொர்க் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், கடந்த ஜூன் 19-ஆம் தேதி காஜாங் பகுதியில் 'ஆப்ஸ் கார்கோ' என்ற சிறப்பு நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு, 18 முதல் 38 வயதுக்குட்பட்ட 6 ரோஹிங்கியா ஆடவர்களை கைது செய்தனர்.
கொள்ளையின் போது, கிடங்கு காவலரின் கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டு, அங்கிருக்கும் அலுமினிய கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்வதே, அக்கும்பலின் வழக்கமான செயல்முறையாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.








