கிள்ளான், ஜாலான் ராயா பாராட்டில் மது போதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர் மீது, உயிரிழந்த மோட்டார் சைக்கிள் ஓட்டியின் மனைவி 10 லட்சம் ரிங்கிட் நஷ்டஈடு கோரி சிவில் வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளார்.
கடந்த மார்ச் 29-ஆம் தேதி நிகழ்ந்த இந்த விபத்தில், 32 வயதான கிடங்குத் தொழிலாளியும் விநியோக ஊழியருமான அமிருல் ஹபீஸ் ஓமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய 28 வயது தொழில்நுட்ப வல்லுநர் ஆர். சக்திகணபதி மீது தற்போது மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அமிருல்லின் மனைவி நூர் நாடியா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகமது பைசி சே அபு இது குறித்துப் பேசுகையில், "உயிரிழந்தவரின் கடைசிச் சம்பளம், வயது மற்றும் அவரைச் சார்ந்திருப்பவர்களின் தேவைகளைக் கணக்கிட்டு, சுமார் 10 லட்சம் ரிங்கிட் வரை நஷ்டஈடு கோரப்படும்" எனத் தெரிவித்தார்.
அதேவேளையில், விபத்தின்போது சக்திகணபதி போதைப்பொருள் பயன்படுத்தியிருந்ததை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். அவருக்குப் பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.








