2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளை இனவாரியாகப் பிரித்துக் காட்டும் வகையில் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி அறிக்கை முற்றிலும் போலி என்று கல்வி அமைச்சு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் சின்னத்துடன் பரவி வரும் அந்தப் போலி அறிக்கையில், மலாய் மாணவர்களின் தேர்ச்சி விகிதம், மற்ற இன மாணவர்களை விடக் குறைவாக இருப்பதாகத் தவறான புள்ளிவிவரங்கள் பகிரப்பட்டுள்ளன என்று கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.
இன்று சிலாங்கூர், டெங்கில் தமிழ்ப்பள்ளிக்கு வருகை புரிந்த துணையமைச்சர் வோங் கா வோ, செய்தியாளர்களிடம் பேசுகையில், "சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்தத் தகவல் 101 விழுக்காடு தவறானது என்றார்.
அத்தகைய எந்த ஒரு அறிக்கையையும் கல்வி அமைச்சு வெளியிடவில்லை" என்று வோங் கா வோ திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
நேற்று அறிவிக்கப்பட்ட எஸ்.பி.எம். அதிகாரப்பூர்வ தேர்வு முடிவுகளில் இத்தகைய இனவாரியான ஆய்வுகள் எதுவும் இடம்பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பொதுமக்கள் உண்மைக்குப் புறம்பான இத்தகைய தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.








