பினாங்கு, மே 24-
பினாங்கு,சுங்காய் பாக்காப் சட்டமன்ற உறுப்பினரான பாஸ் கட்சியைச் சேர்ந்த நோர் ஜம்ரி லத்தீப் இன்று பிற்பகல் 1.38 மணியளவில் காலமானார்.
செபாரங் ஜெயா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோர் ஜம்ரி லத்தீப், சுயநினைவு திரும்பாமலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயிற்றில் ஏற்பட்டுள்ள உபாதையின் காரணமாக செபராங் ஜெயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோர் ஜம்ரி லத்தீப் மிக கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக வெளிவந்த தகவலை பினாங்கு மாநில பாஸ் கட்சித் தலைவரும், மாநில எதிர்க்கட்சித் தலைவருமான முஹம்மது ஃபௌஸி யூசுஃப் இன்று காலையில் மறுத்தார்.
அது வெறும் புரளி என்று வர்ணித்த முஹம்மது ஃபௌஸி, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அவருக்கு நிறைய ஓய்வுத் தேவை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார். அவர் அறிவித்த அடுத்த சில மணி நேரத்திலேயே நோர் ஜம்ரி லத்தீப் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் சுங்காய் பாக்காப் தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்ட நோர் ஜம்ரி லத்தீப் 1,563 வாக்குகள் வித்தியாசத்தில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் நூர்ஹிதயா சே ரோஸ்- ஐ தோற்கடித்தார்.
நோர் ஜம்ரி லத்தீப், பாஸ் கட்சியின் நிபோங் தெபால் தொகுதியின் தலைவர் ஆவார்.








