ஜார்ஜ்டவுன், ஜூன்.11-
ஜார்ஜ்டவுன், ஜாலான் டாக்டர் வூ லியேன் தே சாலையில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டொன்றில், கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, ஓராண்டுக்கு மேலாக அடைத்து வைக்கப்பட்டு இருந்தாக நம்பப்படும் மூன்று இந்தோனேசிய ஆடவர்களைப் போலீசார் காப்பாற்றியுள்ளனர்.
மலேசியாவிற்குச் சென்ற தங்கள் உறவினரை ஓராண்டுக்கு மேலாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று இந்தோனேசியா, ஆச்சேவிலிருந்து வந்த ஒருவர் அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து இது குறித்து ஆராய்ந்ததில் அந்த மூன்று இந்தோனேசியர்கள் வீடொன்றில் அடைக்கப்பட்டு இருந்தது போலீசாருக்குத் தெரிய வந்துள்ளது.
அந்த மூவரையும் பாதுகாப்பாக மீட்ட போலீசார், அவர்களை அடைத்து வைத்திருந்ததாக நம்பப்படும் ஓர் அந்நியப் பெண் உட்பட நான்கு நபர்களைக் கைது செய்துள்ளனர்.
40 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று உள்ளூர் ஆடவர்களும், அந்த அந்நியப் பெண்ணும் இன்று காலையில் ஜார்ஜ்டவுன், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, வரும் ஜுன் 14 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கான அனுமதியைப் போலீசார் பெற்றுள்ளனர்.
மூன்று இந்தோனேசியர்களையும் போலீசார் மீட்கும் போது, அந்த மூவரின் கால்களும் இரும்பு கேட்டுடன் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்ஸா அஹ்மாட் உறுதிப்படுத்தியுள்ளார்.








