கைதிகள் எவரையும் விடுவிக்கும் நிகழ்ச்சி நிரலை ஜொகூர் மாநிலத் தேர்தல் மேடைகளில் பயன்படுத்தக் கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் விடுத்த எச்சரிக்கையை பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் அகமத் ஃபத்லி ஷாரி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த 14-ஆவது பொதுத் தேர்தலின் போது, அன்வாரை விடுவிப்பதையே பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி தங்களின் முக்கியத் தேர்தல் பிரச்சார உத்தியாகப் பயன்படுத்தியது என்று பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கை விடுவிப்பதற்காகவே ஜொகூர் மாநிலத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படுவதாக அன்வார் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அகமத் ஃபத்லி தமது முகநூல் பக்கத்தில் இக்கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.
ஜொகூர் மாநிலத் தேர்தல் மத்திய அரசை மாற்றப் போவதில்லை என்ற சூழலில், பிரதமர் ஏன் இவ்வளவு கவலைப்படுகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், 2018-இல் அன்வாரை விடுவிக்கும் விவகாரம் 'மகாதிர் பிரகடனத்தில்' சேர்க்கப்பட்டிருந்ததையும் நினைவூட்டியுள்ளார். இருப்பினும், நாட்டின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், மத்திய-மாநில அரசாங்கங்களின் நல்லுறவைத் தொடரவும் பக்காத்தான் ஹரப்பான் இத்தேர்தலை எதிர்கொள்வதாக அன்வார் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.








