ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஐந்து நாட்களே எஞ்சியுள்ள நிலையில், புத்திரி வங்சா சட்டமன்றத் தொகுதியில் பி.கே.ஆர் சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் மஸ்லீ மாலிக் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஒரு வார காலப் பிரச்சாரத்தில் தொகுதி மக்களின் ஆதரவு மிகவும் ஆக்கப்பூர்வமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, அங்குள்ள ஆலய நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு சுப காரியங்களில் தாம் கலந்து கொண்ட போது, இந்தியச் சமூகத்தினரின் ஆதரவும் எழுச்சியும் தமக்கு அமோகமாகப் பெருகி வருவதாக மஸ்லீ மாலிக் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அதேவேளையில், அத்தொகுதி இளைஞர்களின் பேராதரவும் தம்மைப் பிரமிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் கூறினார்.
இளைஞர்களிடம் தாம் முக்கியமாக மூன்று விஷயங்களை வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், அதில் முதன்மையாகக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். இளைஞர்கள் தங்களின் முறையான படிப்பு முடிந்த பின்னரும் தொடர்ந்து படித்து, தனிப்பட்ட திறன்களையும் ஆங்கில அறிவையும் பெருக்கிக்கொள்ள வேண்டும் என்றும், அப்போதுதான் நல்ல சம்பளத்துடன்கூடிய வேலைவாய்ப்புகளைப் பெற முடியும் என்றும் விவரித்தார்.
தமக்கு வாக்களித்து புத்திரி வங்சா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்வதன் மூலம், அத்தொகுதியில் அறிவுச் செறிந்த, கல்விக்கற்ற ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்கிக் காட்டுவதாக மஸ்லீ மாலிக் தொகுதி மக்களுக்கு உறுதியளித்தார்.








