சிலாங்கூர், கோலா லங்காட் பகுதியில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்குள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களுக்கு உளவியல் ரீதியான ஆதரவை வழங்குவதற்காக ஆலோசகர்கள் குழு உடனடியாக அனுப்பப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் முதுகு மற்றும் தோள்பட்டை பகுதிகளில் பலத்த காயமடைந்த 15 வயது மாணவி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது நிலைமை சீராக உள்ளதாகவும் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்துள்ளார்.
பள்ளியின் தொழுகை அறைக்கு அருகில் வைத்து ஆசிரியர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட 15 வயதுடைய அதே பள்ளி மாணவியான சந்தேக நபர், தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திலிருந்து கத்தி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காயமடைந்த மாணவிக்குச் சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதோடு, அவரது குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளை வழங்குவதே தற்போதைய முக்கிய நோக்கம் என சிலாங்கூர் மாநில கல்வித் துறை தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பொதுமக்கள் யாரும் தேவையில்லாத வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் போலீஸ் கேட்டுக்கொண்டுள்ளனர்.








