கோலாலம்பூர், மே 08-
அதிகார துஷ்பிரயோக மற்றும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும் முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின், தற்காலிகமாக தனது அனைத்துலக கடப்பிதழை திரும்ப பெறுவதற்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.
புற்று நோயினால் பாதிக்கப்பட்டு, தற்போது ஆஸ்திரேலியாவில் சிகிச்சை பெற்று வரும் தனது குடும்ப உறுப்பினரை சென்று பார்ப்பதற்கு ஏதுவாக தனது கடப்பிதழை நீதிமன்றம் தற்காலிகமாக திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான முகைதீன் யாசின் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு நீதிபதி அசுரா அல்வி அனுமதி அளித்தார்.
முகைதீனின் இந்த விண்ணப்பத்திற்கு பிராசிகியூஷன் தரப்பு ஆட்சேபனை தெரிவிக்கவிலை.
நாட்டின் எட்டாவது பிரதமராக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் முதல் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரையில் பொறுப்பு வகித்த போது, தனது அந்தஸ்தை பயன்படுத்தி, மூன்று நிறுவனங்களிடமிருந்து 23 கோடியே 23 லட்சம் வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக முகைதீன் குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அவரின் அனைத்துலக கடப்பிதழை நீதிமன்றம் பிடித்தம் செய்துள்ளது.








