ஜோகூர், ஜோகூர் பாரு-வில் MESSENGER செயலி வாயிலாக ஏமாற்றுப்பேர்வழி வழங்கிய பகுதி நேர வேலையை நம்பி அவரிடம் 733 ஆயிரத்து 597 வெள்ளியை பறிகொடுத்து ஏமாந்துள்ளார், வியாபாரி ஒருவர்.
பாதிக்கப்பட்ட 57 வயதுடைய வியாபாரி, நேற்று போலிசிடம் புகாரளித்திருப்பதாக, ஜொகூர் போலீஸ் தலைவர் கமிஷனர் எம் குமார் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம், MESSENGER செயலி வாயிலாக அறிமுகமான அந்த ஏமாற்றுப்பேர்வழியின் பேச்சை நம்பிய வியாபாரி, அவர் வழங்கிய அகப்பக்கத்தில் தம்மை பதிந்துக்கொண்டார்.
பின்னர், தமக்கு வழங்கப்பட்ட உத்தரவுக்கு ஏற்ப, அழகு சாதனம் மற்றும் விளையாட்டு சார்ந்த பொருட்களை வாங்குவதற்கு 267 ஆயிரம் வெள்ளியை, அந்த மோசடி பேர்வழி வழங்கிய பொருளக கணக்கில் செலுத்தியுள்ளார்.
சம்பந்தப்பட்ட அகப்பக்கத்தில் 70 ஆயிரம் வெள்ளி ஆதாயம் காட்டப்பட்டதை நம்பிய அவர், முழுவதுமாக 733 ஆயிரத்து 597 வெள்ளியை செலுத்தியுள்ளார்.
ஆனால், அந்த ஆதாயத்தை மீட்டுக்கொள்ள முயன்ற போது, அது முடியாமல் போகவே, தாம் ஏமாந்துள்ளதை உணர்ந்த அவர், போலீசில் புகாரளித்ததாக எம் குமார் கூறினார்.








