கோலாலம்பூர், செராஸ் பகுதியில் உள்ள பல வீடுகளில் அடுத்தடுத்து அரங்கேறிய கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஆறு பேர் கொண்ட கும்பலை போலீஸ் துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது.
இது குறித்துச் செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ரோஸ்டி தாவூத் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த ஜூன் 6-ஆம் தேதி நகரின் மூன்று வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் இரு மியன்மார் ஆண்கள், ஒரு இந்தோனேசியப் பெண், இரு உள்ளூர் ஆண்கள் மற்றும் ஓர் உள்ளூர் பெண் என மொத்தம் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 6 ஆடம்பரக் கடிகாரங்கள், 7 பிராண்டட் கைப்பைகள், 7 கைபேசிகள், ஒரு கேமிங் லேப்டாப் மற்றும் ஒரு நீளமான பாராங் கத்தி உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி தாமான் புக்கிட் செராஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 13 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் அதிகமான மதிப்புள்ள நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் விசாரணையின் மூலம் இக்கும்பல் பிடிபட்டுள்ளது என்று ஏசிபி முகமது ரோஸ்டி விளக்கினார்.








