கோலாலம்பூர், மே 03-
வீட்டு சிறை தொடர்பில், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் முன்னெடுத்துள்ள சட்டநடவடிக்கையில், இடைத்தரப்பாக தம்மைச் சேர்த்துக்கொள்வதில், முதலீட்டு, வர்த்தக மற்றும் தொழில் அமைச்சர் தெங்க்கு ஜஃப்ருல் தெங்க்கு அப்துல் அஜீஸ் தோல்வி கண்டுள்ள விவகாரம் மலாய் ஆட்சியாளர்களின் நிலை, தன்மானம் உட்பட அரசாங்கத்தின் உயர்நெறி முதலானவற்றை கேள்விக்குறியாக்கியுள்ளதாக PAS கட்சியின் பொதுச்செயலாளர் தக்கியுதீன் ஹாசன் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நஜிப் ரசாக்கின் வீட்டு சிறை விவகாரத்தில், தாம் சம்பந்தப்படவில்லை என பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். ஆனால், UMNO தலைவரும் துணைப்பிரதமருமான அஹ்மத் ஜாஹித் ஹமிடி , நஜிப் ரசாக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த 12 ஆண்டுகள் சிறையை வீட்டு சிறையாக மாற்றுவதற்கு முன்னாள் பேரரசர் கூடுதல் உத்தரவை வழங்கியதாக, நீதிமன்றத்தில் AFFIDAVIT மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த மனுவில் சில தவறுகள் இருப்பதால், அதனை திருத்திக்கொள்ள, தெங்க்கு ஜஃப்ருல், அனுமதி கோரிய நிலையில், கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் காரணங்கள் ஏதும் கூறாமல் அதனை நிராகரித்துள்ளது.
இரு அமைச்சர்களும் நீதிமன்றத்தில் முரண்பாடான தகவலை வழங்கியுள்ளதாக PAS கட்சி கருதுவதாக கூறிய தக்கியுதீன் ஹாசன், அரசாங்க தலைமைத்துவத்தின் மீது அது எதிர்மறையான கண்ணோட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.








