ஜொகூர் பாரு, மே 30-
குற்றச்செயல் சட்டத்தின்படி புகாரளித்தவர் அவரது புகாரை மீட்டுக்கொண்டாலும் அவ்விவகாரம் இன்னமும் முடிவு பெறவில்லை என பாசிர் குடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அப்துல் கரீம் தெரிவித்தார்.
முதலில் செய்யப்படும் FIR எனப்படும் தகவல் அறிக்கையின் அடிப்படையில், ஒருவர் மீது நேரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதும் குற்றவியல் சட்டத்தின் குற்றக்கூறுகள் நிகழ்ந்துள்ளதும் கண்டறியப்பட்டால், தாக்குதலை நடத்தியவர் மீது விசாரணையை நடத்துவது போலீசின் கடமையாகும்.
பாதிக்கப்பட்டவரை அரசாங்க மருத்துவமனைக்கு அனுப்பி, அவருக்கு ஏற்பட்டுள்ள காயத்தைக் கண்டறிய வேண்டும்.அச்சம்பவம் குறித்து விசாரணையை அறிக்கையை திறந்து தாக்குதல்காரரிடம் விளக்கத்தையும் போலீஸ் பதிவு செய்ய வேண்டும்.
விசாரணை 24 மணி நேரத்தை தாண்டினால், அவரை தடுத்து, தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கான அனுமதியை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் பெற வேண்டும் என தனது ஊடக அறிக்கையில், ஹசன் அப்துல் கரீம் கூறினார்.
அந்த அறிக்கையில், எவரது பெயரையும் குறிப்பிடாவிட்டாலும், அரச குடும்பத்தைச் சேர்ந்தவரின் மெய்க்காப்பாளர் ஒருவர் உடற்பேறு குறைந்த E-HAILING ஓட்டுநரை, முகத்தில் குத்தி, தாக்கிய விவகாரத்தை ஹசன் அப்துல் கரீம் சுட்டிக்காட்டுவதாக அறியப்படுகின்றது.
தாம் தாக்கப்பட்டதாக முன்னதாக புகாரளித்திருந்த சம்பந்தப்பட்ட ஓட்டுநர், அதை மீட்டுக்கொண்ட நிலையில், அவ்விவகாரம் சுமூகமாக தீர்த்துக்கொள்ளப்பட்டதை போலிஸ் உறுதிபடுத்தியுள்ளது.








