கோலாலம்பூர், மே 30-
நாட்டின் முன்னாள் டென்னிஸ் தலைமை பயிற்றுநர் சுரேஷ் மேனன்-னுக்கு, ஒப்பந்தப்படி 3 மாதங்களுக்கு தொடர்ச்சியாக சம்பளத்தை வழங்காமல், தவறான முறையில் அவரை பணிநீக்கம் செய்ததற்காக, மலேசிய புட்தரை டென்னிஸ் சங்கம், அவருக்கு 32 ஆயிரத்து 100 வெள்ளியை இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களில், சம்பந்தப்பட்ட சங்கம் வேண்டுமென்றே, அவருக்கு சம்பளத்தை வழங்காதது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக, தொழில்துறை நீதிமன்ற தலைவர் அகஸ்டின் அந்தோணி தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
தலைமை பயிற்றுநர் எனும் உயரிய பொறுப்புக்கு அவரை நியமனம் செய்துவிட்டு, அவரது மாத சம்பளமான ஐந்தாயிரம் அமெரிக்க டாலரை வழங்காதது, பணி ஒப்பந்த நிபந்தனையை மீறிய செயலாகும்.
அத்துடன், கடந்த 2020ஆம் ஆண்டில், கோவிட்-19 பெருந்தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில், அவரது சம்பளம், ஈராயிரத்து 500 அமெரிக்க டாலராக குறைக்கப்பட்டு, ஜூனில் மறுசீரமைப்பு செய்ய அட்டவணையிடப்பட்டது.
தமக்கு முழு சம்பளம் அளிக்கக்கோரி, சுரேஷ் மேனன் செய்திருந்த கடிதத்தையும், அச்சங்கம் நியாயமாக பரிசீலிக்கவில்லை என கூறி 52 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில், அகஸ்டின் அந்தோணி கூறியுள்ளார்.








