பத்துகேவ்ஸ், ஜூன் 04-
பத்துகேவ்ஸ் மற்றும் அதன் சுற்று வட்டார இந்திய வாழ் மக்களுக்காக நீண்ட காலமாக போராடப்பட்டு வரும் சகல வசதிகளுடன் அமையப்பெறக்கூடிய ஈமச்சடங்கிற்கான இடுகாட்டு நிலத்திற்கு, தற்போது ஸ்ரீ கோம்பாக், புக்கிட் பெர்மாட்டா- பகுதியில் பத்து ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
பத்துகேவ்ஸ் வட்டார மக்களின் ஒத்துழைப்புடன் அடையாளம் காணப்பட்டுள்ள அந்த பத்து ஏக்கர் நிலம் குறித்து இந்த நிலத்திட்டத்தை முன்னெடுத்துள்ள மலேசிய தமிழர் முன்னேற்றக் கழகப் பொறுப்பாளர்கள், இன்று காலையில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பா ராயுடுவை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து விளக்கம் அளித்தனர்.
ஷா ஆலம், சிலாங்கூர் மாநில அரசு கட்டத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் மலேசிய தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீ ரமேஷ் கண்ணன், இதர பொறுப்பாளர்களான ஈஸ்வரி சுப்பிரமணியம், ரவிசங்கர் பரமராஜன் மற்றும் பொது மக்கள் சார்பில் மதிவாணன் சக்திவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
பத்துகேவ்ஸ் வட்டார இந்திய வாழ் மக்களுக்காக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரிடின் ஷாரி ஆங்கீகரித்த பத்து ஏக்கர் நிலம் காலப்போக்கில் 2.95 ஏக்கராக சுருக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த நிலத்திற்கு மாற்றாக இந்த பத்து ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ரமேஷ் விளக்கினார்.
நவீன மின்சுடலை, கார் நிறுத்தும் இடம், ஈமச்சடங்கு செய்வதற்கு தனி மண்டபம், அரிச்சந்திரன் கோவில், ஆஸ்தியை பாதுகாக்க தனியிடம், பொதுமக்கள் அமர்வதற்கான இடம் உட்பட ஒரு பூங்காவைப் போல அமையவிருக்கும் இத்திட்டத்திற்கு தனது ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவதாக ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராயுடு உறுதி அளித்து இருப்பதாக ரமேஷ் தெரிவித்தார்.
பாப்பா ராயுடுவின் ஆலோசனையின் பேரில் அந்த பத்து ஏக்கர் நிலத்தைப் பெறுவதற்கான விண்ணப்பம், கோம்பாக் மாவட்ட நில மற்றும் கனிம வள இலாகாவிற்கு உடனடியாக சமர்ப்பிக்கப்படும் என்று ரமேஷ் குறிப்பிட்டார்.








