பத்து பஹாட், மே 29-
தொலைப்பேசி மோசடியில் வியாபாரி ஒருவர் 130,000 வெள்ளியை இழந்தார். பாதிக்கப்பட்ட 61 வயது அந்த பெரியவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை பகாங், குவாந்தானில் உள்ள தெனாகா நேஷனல் பெர்ஹாட் -டின் தொழிலாளர் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்ததாக தெரியப்படுகிறது.
அந்த அழைப்பில் சம்பந்தப்பட்ட நபர் பேசியது சந்தேகத்திற்குரியதாக இருந்ததால் பாதிக்கப்பட்டவர் முதலில் அதை மறுத்துள்ளார். பிறகு, அந்த தொலைப்பேசி அழைப்பு பகாங், கான்டின்ஜென் போலீஸ் தலைமையகத்தின் அதிகாரி என்று கூறிக்கொள்ளும் மற்றொரு நபருடன் இணைக்கப்பட்டதாக பத்து பஹாட் மாவட்ட காவல்துறையின் செயல் தலைவர், கண்காணிப்பாளர் ஷாஹ்ருலானுார் முஷாதத் அப்துல்லா சானி கூறினார்.
அதில் பாதிக்கப்பட்ட அந்நபர் சட்டவிரோதமாக பணமோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் விசாரணை நோக்கங்களுக்காக வங்கியின் தகவல்களை ஒப்படைக்குமாறு சந்தேகிக்கும் நபர் கேட்டறிந்ததாக ஷாஹ்ருலானுார் முஷாதத் குறிப்பிட்டார்.
அதை தொடர்ந்து, கடந்த மே 26 ஆம் தேதி பாதிக்கப்பட்டவர் வங்கி கணக்கை சோதனையிட்டு பார்க்கையில், அவரின் வங்கியிலிருந்து குறிப்பிடப்பட்ட தொகை மற்றொரு வங்கிகிற்கு மாற்றப்பட்டிருப்பதை உணர்ந்து போலீசில் புகார் அளித்ததாக ஷாஹ்ருலானுார் முஷாதத் மேலும் விவரித்தார்.
இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 420 ஆவது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.








