சிரம்பான், ஆகஸ்ட்.02-
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராக இன்று பதவியேற்றுள்ள டத்தோ இஸ்மாயில் லாசிம், நாளை ஆகஸ்ட் 3 -ஆம் தேதி திங்கட்கிழமை மாநிலம் முழுவதும் பொது விடுமுறையாக அறிவித்துள்ளார்.
Istana Besar Seri Menanti அரண்மனையில் இன்று மந்திரி பெசாராகப் பதவியேற்றுக் கொண்ட பிறகு அவர் வெளியிட்டுள்ள தமது முதல் அறிக்கையில், மாநில ஆட்சியாளர் Yang di-Pertuan Besar Tuanku Muhriz Tuanku Munawir-இன் ஒப்புதலுடன் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராகத் தம்மை நியமிக்க ஒப்புதல் வழங்கிய மாநில ஆட்சியாளருக்குத் தனது மனமார்ந்த நன்றியையும் இஸ்மாயில் லாசிம் தெரிவித்துள்ளார்.
மேலும், மாநிலத் தேர்தலில் பங்கேற்று கடுமையாக உழைத்த அனைவருக்கும், வாக்களித்த மாநில மக்களுக்கும் நன்றியைத் தெரிவிக்கும் வகையிலேயே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.








