லங்காவி, நவம்பர்.18-
மலேசிய – தாய்லாந்து எல்லைக்கு அருகில் லங்காவி கடற்பகுதியில் கள்ளத் தோணி கவிழ்ந்து நீரில் மூழ்கிய சம்பவத்தில் இதுவரை 37 சடலங்கள் மீட்கப்பட்டதையடுத்து, மலேசியா நேற்று தனது தேடும் பணியை நிறுத்திக் கொண்டது.
கடந்த நவம்பர் 6-ஆம் தேதி நடந்த இச்சம்பவத்தின் போது, நீரில் மூழ்கிய 70-க்கும் மேற்பட்டவர்களில் 14 பேர் மீட்கப்பட்டனர். எஞ்சியவர்களைத் தேடும் பணி கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்தது.
இந்தத் தேடும் பணியில், மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் 19 படகுகளும், 300 அதிகாரிகளும் ஈடுபட்டு வந்ததாக அதன் கெடா மற்றும் பெர்லிஸ் மாநில இயக்குநர் ரொம்லி முஸ்தஃபா தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் தேடும் பணி அதிகாரப்பூர்வமாக நிறுத்திக் கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
என்றாலும், புதிய தடயங்களோ அல்லது அறிகுறிகளோ தென்பட்டால், மீதமுள்ளவர்களைத் தேடும் நடவடிக்கையைத் தாங்கள் மறுபரிசீலனை செய்வதாகவும் ரொம்லி முஸ்தஃபா தெரிவித்தார்.








