கோலாலம்பூர், ஜூன் 04-
எதிர்கட்சித் தலைவரும், பெர்சத்து கட்சியின் பொதுச் செயலாளருமான டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் மகன், லஞ்சமாக ஒரு லட்சம் வெள்ளியை பெற்றதாக கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
Heitech Pudu Berhad- டின் சந்தை ஆலோசனை நிறுவனங்களாக Syarikat Rimba Merpati Sdn. Bhd. மற்றும் Syarikat Per My Solution என்ற இரண்டு நிறுவனங்களை, நியமிப்பதற்கு ஹம்சா ஜைனுடின் மகனான 40 வயது முஹம்மது பைசால் ஹம்சா கையூட்டாக ஒரு லட்சம் வெள்ளியை பெற்றதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம், கோலாலம்பூர், Jalan Dutamas 1 என்ற முகவரியில் Publika Shopping Gallery- கட்டடத்தில் உள்ள ஒரு அவவலகத்தில் முஹம்மது பைசால் ஹம்சா இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பெறப்பட்ட லஞ்சத் தொகைக்கு நிகராக ஐந்து மடங்க அபராதம் விதிக்க வகை செய்யும் 2009 ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய சட்டத்தின் கீழ் முன்னாள் உள்துறை அமைச்சரான ஹம்சா ஜைனுடின் மகன் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து முஹம்மது பைசால் ஹம்சா விசாரணை கோரியிருப்பதால் ஒரு நபர் உத்தரவாதத்துடன் அவரை 25 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்ததுடன் அவரின் அனைத்துலக கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டது.








