கோலாலம்பூர், ஜூன் 14-
இலக்கிடப்பட்ட டீசல் உதவித் தொகைத் திட்டத்தினால் பொருட்களின் விலை உயராது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவாதம் அளித்த போதிலும், டீசல் விலை உயர்த்தப்பட்ட ஒரே நாளில் பொருட்களின் விலை உயர்ந்து இருப்பதாக பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்தார்.
பிரதமரின் அறிவிப்பு முழுக்க முழுக்க தவறாகும். காரணம், டீசல் விலை லிட்டருக்கு 3 வெள்ளி 35 காசுக்கு உயர்த்தப்பட்ட மறுநாளிலேயே பொருட்களின் விலை கிடுகிடு ஏற்றம் காணத் தொடங்கிவிட்டதாக முன்னாள் பிரதமருமான முகைதீன் குறிப்பிட்டார்.
டீசல் விலை உயர்வினால் பணக்காரர்களும், அந்நிய நாட்டவர்களும் மட்டுமே பாதிக்கப்படுவார்கள் என்று பிரதமர் கூறுகிறார்.
குறிப்பாக டீசல் விலை உயர்வினால் பொருட்களின் விலை உயர்த்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு இலக்கிடப்பட்ட வர்த்தக வாகனகங்களுக்கு டீசலுக்கான உதவித் தொகையை அரசாங்கம் வழங்குகிறது. இதன் மூலம் அவர்கள் போக்குவரத்து கட்டணத்தை உயர்த்தமாட்டார்கள். சாமானிய மக்களும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆனால் பிரதமர் சொன்னதற்கும், தற்போது நடைபெறும் சம்பவங்களுக்கும் நேர்மாறாக உள்ளது என்று முகைதீன் குற்றஞ்சாட்டுகிறார்.
காரணம், டீசல் விலை உயர்வை காரணம் காட்டி, இழுவை வாகனங்கள், தங்கள் சேவைக்கட்டணத்தை உயர்த்தியுள்ளன.
பணக்காரர்களின் வாகனங்கள் மட்டும்தான் பாதி வழியில் பழுதடையுமா? ஏழைகளில் வாகனங்கள் பாதி வழியில் பழுதடையாதா? என்று முகைதீன் வினவினார்.
தவிர, தாங்கள் மேற்கொண்ட ஆய்வில் காய்கறிகள் மற்றும் வீட்டு கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்து இருப்பதாக முகைதீன் கூறுகிறார்.
சிமெண்ட் மிக்சர் லோரிகள், தங்களின் போக்குவரத்து கட்டணத்தை உயர்த்தியிருப்பதை பகிரங்கமாக அறிவித்து இருப்பதையும் முகைதீன் சுட்டிக்காட்டினார்.
வீடுகளை பணக்காரர்கள் மட்டும்தான் கட்டுகிறார்களா? மற்றவர்கள் கட்டவில்லையா? என்று முகைதீன் வினவினார்.
சந்தையில் சிவப்பு மிளகாய், வெள்ளரிக்காய், கடுகுக்கீரை போன்ற அத்தியாவசிய காய்கறிகள் விலை உயர்ந்து விட்டன. இவ்வகை காய்கறிகளை பணக்காரர்கள் மட்டும்தான் சாப்பிடுகிறார்களா? ஏழைகள் சாப்பிடவில்லையா ? என்றும் முகைதீன் வினவினார்.








