கோல குபு பாரு, மே 02-
கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பெரிக்காதான் நசியனால் கூட்டணி தலைவர்கள் சிந்திப்பதற்கு வேறு எதுவும் இல்லாத காரணத்தினால் தாய்மொழி பள்ளிகள் உட்பட இனம் மற்றும் சமயம் தொடர்பான விவகாரங்களை எழுப்பி வருவதாக, PKR-ரின் தகவல் பிரிவு தலைவர் ஃபாஹ்மி ஃபட்சில் சாடினார்.
அவர்கள் முன்வைக்கின்ற இனவாத கூற்றுகள், அவர்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அதனை பெரிக்காதான் நசியனாலின் தேர்தல் பணிப்படையினர் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.
PAS கட்சியின் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்-ங்கின் பேரப்பிள்ளை உட்பட அக்கட்சியின் பல தலைவர்கள், அவர்களது பிள்ளைகளைச் சீனப் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளனர்.
மலேசியா மிதவாத போக்கைக் கடைப்பிடிக்கக்கூடிய மக்களைக் கொண்டிருக்கும் ஒரு நாடு. தாய்மொழி பள்ளிகள் உட்பட இனவாத தன்மையிலான விவகாரங்களை அரசியல் கட்சிகள் இன்னமும் முன்வைத்து வருவது முதிர்ச்சியற்ற செயலாக உள்ளது எனவும் FAHMI FADZIL கவலையை வெளிப்படுத்தினார்.








