ஷா ஆலாம், மார்ச்.25-
ஷா ஆலாம், செக்ஷன் 19 பகுதியில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் இருந்து விழுந்ததாக நம்பப்படும் 14 வயது சிறுவன் நேற்று பிற்பகல் உயிரிழந்தார்.
நேற்று மாலை சுமார் 4.20 மணியளவில் கட்டிடத்தின் கீழ் பகுதியில் சுயநினைவிழந்த நிலையில் பொதுமக்களால் கண்டறியப்பட்ட அவர், உடனடியாக ஷா ஆலாம் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.
இருப்பினும், மாலை 5.40 மணியளவில் அவர் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து மாலை 6.44 மணியளவில் போலீசாருக்குத் தகவல் கிடைத்ததாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ரம்சே எம்போல் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், சந்தேகத்திற்குரிய வகையில் எந்தவித அறிகுறிகளும் கண்டறியப்படாத நிலையில், இவ்வழக்கு 'திடீர் மரணம்' என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மரணத்திற்கான உண்மையான காரணத்தை அறிய இன்று சவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.








