பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களை, நிறுவனத்தின் நற்பெயரைக் காக்க வேண்டும் என்ற நோக்கில் மறைக்க வேண்டாம் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார். வன்முறையை ஒரு ‘அறநெறி சார்ந்த நோய்’ என்று வர்ணித்த அவர், இத்தகைய சம்பவங்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பண்டார் என்ஸ்டெக்-இல் உள்ள இன்ஸ்டிடியூட் பென்டிடிகான் குரு காம்பஸ் பென்டிடிகான் டெக்னிக்-இல் நடைபெற்ற ‘தேமு அன்வார்’ நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் முன்னிலையில் பேசிய அவர் கல்வியானது வெறும் கல்வித்திறனை மட்டும் வளர்ப்பதாக இருக்கக்கூடாது என்றும், அது மனிதநேயம் மற்றும் மற்றவர்களை மதிக்கும் பண்புகளைக் கொண்ட தலைமுறையை உருவாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கல்வியில் சிறந்து விளங்குவது மட்டும் முக்கியமல்ல, மாறாக நல்ல குணநலன்களும் நற்பண்பு நிறைந்த மனப்பான்மையும் மிக அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.








