சிலாங்கூர், மே 02-
நேற்று, தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, பொதுச்சேவை ஊழியர்களுக்கான சம்பளத்தை 13 விழுக்காட்டிற்கும் கூடுதலாக அதிகரித்திருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிட்டுள்ள அறிவிப்பை, எத்தரப்பும் விவாதமாக்கக்கூடாது என மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவுறுத்தினார்.
பொதுச்சேவை ஊழியர்கள் நாட்டின் முதன்மை பணியாளர்களாவர். சிறந்த வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றால், நாட்டின் பொருளாதாரத்தை முதலில் வலுப்பெற செய்வது அவசியமாகின்றது. அதற்கு, பொதுச்சேவை ஊழியர்களின் செயல் மற்றும் உற்பத்தி திறன்கள் அதிகரிக்கப்பட வேண்டும்.
சம்பள உயர்வின் வழி, அத்தரப்பினரின் உத்வேகமும் பணியிடங்களில் செயல்திறன்களும் அதிகரிக்கும் என ஸ்டீவன் சிம் கூறினார்.
ஒற்றுமை அரசாங்கம், பொதுச்சேவை ஊழியர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு தொழிலாளர்களின் நலன்களையும் பேணுகின்றது.
தனியார் துறைகளில் உற்பத்தி திறன் அதிகரிப்புக்கு ஏற்ப, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில், முன்னேற்றக் சம்பளத் திட்டக் கொள்கையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் வழி, குறைந்த பட்ச சம்பள விகிதம் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதை ஸ்டீவன் சிம் சுட்டிகாட்டினார்.








