பெர்லிஸ் , ஜூன் 04-
பெர்லிஸ் மாநிலத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து கடந்த ஆண்டு ஜுன் மாதம் வரையில் திருமணப் பதிவிற்கு 11 லட்சத்து 83 ஆயிரம் வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக பெர்லிஸ் மாநில இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான இலாகாவின் மூத்த அதிகாரி மற்றும் கங்கார்-ரில் ஒரு பள்ளி வாசலின் இமாம் உட்பட மூவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.
25 க்கும் 52 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூன்று சந்தேகப் பேர்வழிகளும் நேற்று கைது செய்யப்பட்டதுடன் விசாரணைக்கு ஏதுவாக அவர்களை வரும் ஞாயிற்றுக்கிழமை வரையில் தடுப்புக்காவலில் வைப்பதற்கான நீதிமன்ற ஆணையை SPRM பெற்றுள்ளது.
இந்த மூவரின் முக்கிய சந்தேகப்பேர்வழியான 45 வயதுடைய நபர், ஓர் அரசாங்கப் பணியாளர் ஆவார். அந்த நபர், நேற்று மாலை 4.10 மணியளவில் பெர்லிஸ் மாநில இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான இலாகாவின் அலுவலகத்தில் கைது செய்யங்பபட்டதாக SPRM வட்டாரம் தெரிவத்தது.
கைது செய்யப்பட்ட மற்ற இரண்டு நபர்கள், பெர்லிஸ் மாநிலத்தில் நடைபெறக்கூடிய திருமணப் பதிவுகள் எவ்வித சிக்கலின்றி சுலபமாக நடைபெறுதற்கு பெரும் தொகையை லஞ்சமாக பெறுவதில் அந்த மூத்த சமய அதிகாரிக்கு உடந்தையாக செயல்பட்டதாக நம்பப்படுகிறது.








