வெளிநாட்டினரைத் திருமணம் செய்த மலேசியத் தாய்மார்களின் வெளிநாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானியங்கி முறையில் குடியுரிமை வழங்குவது எப்போது என்பது குறித்த இறுதி கட்ட முடிவை அரசாங்கம் எடுத்து வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட இவ்விவகாரம் மீதான அரசியலமைப்பு சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக இறுதிச் செயல்முறைகளுக்காக தற்போது தாங்கள் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சை பொறுத்தவரை அதன் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் தேவையான படிவங்கள் உள்ளிட்ட அனைத்து ஆயத்தப் பணிகளும் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும் சைபுடின் கூறினார்.
இதற்கு முன் இத்தகைய குழந்தைகள் பதிவின் மூலமே மலேசியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. ஆனால் இந்தத் திருத்தம் நடைமுறைக்கு வந்தவுடன் சட்டத்தின்படி குழந்தைகளுக்கு தானியங்கி முறையில் குடியுரிமை கிடைக்கும் என்பதால், தாயார்கள் இனி நீதிமன்றத்தில் போராடவோ அல்லது குடியுரிமைக்காக விண்ணப்பிக்கவோ தேவையில்லை என்று அமைச்சர் விளக்கியுள்ளார்.








