ஜோகூர், கூலாயில் 17 வயது பெண் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தொடர்புத்துறை துணை அமைச்சரும், கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ நீ சிங் மற்றும் ஜசெக-வை ரகசிய கும்பலுடன் தொடர்புபடுத்தி சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்ட பதிவுக்கு எதிராக போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.
செனாய் சட்டமன்ற உறுப்பினர் வொங் போர் இயாங் கூறுகையில், அந்த ஃபேஸ்புக் பதிவு தியோ நீ சிங் மற்றும் ஜசெக-வை சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புபடுத்தியதுடன், பெண்ணின் மரணத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கும்பலுடனும் தியோவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டியதாக தெரிவித்தார்.
மேலும், செல்வாக்கு மிக்க தரப்பினர் போலீசாரையும் ஊடகங்களையும் அழுத்தம் கொடுத்து, இந்தச் சம்பவத்தை வெறும் சாலை விபத்தாக சித்தரிக்க முயன்றதாகவும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் இட்டுக்கட்டப்பட்டவை என்றும் வொங் போர் இயாங் மறுத்துள்ளார்.
இதனையடுத்து, தியோவின் சிறப்பு அதிகாரியுடன் இணைந்து கூலாய் போலீஸ் தலைமையகத்தில் நேற்று புகார் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். 17 வயது மரண சம்பவம், தற்போது கொலை வழக்காக விசாரிக்கப்படுகிறது.








