பேராக் மசீச தலைமையகத்தில் ஜாலூர் கெமிலாங் மற்றும் பேராக் மாநிலக் கொடிகளை தலைகீழாக ஏற்றிய ஊழியர், இன்று உடனடியாகப் பதவி விலகியுள்ளார்.
பேராக் மசீச தலைவர் டாக்டர் மஹ் ஹாங் சூன் கூறுகையில், சம்பவம் குறித்து அந்த ஊழியர் வருத்தம் தெரிவித்ததுடன், தாமாகவே பதவி விலக முன்வந்ததாகக் கூறினார்.
தேசிய மாத கொண்டாட்டத்தையொட்டி கொடிகளை ஏற்றும்போது இந்தத் தவறு நடந்ததாகவும், இதில் இரு கொடிகளையும் அவமதிக்கும் நோக்கம் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தவறு தெரியவந்ததும் கொடிகள் உடனடியாக இறக்கப்பட்டு, பின்னர் முறையாக மீண்டும் ஏற்றப்பட்டன.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, ஊழியர் மற்றும் நிர்வாக அதிகாரியின் வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்துக்கு பேராக் சுல்தானிடமும், மலேசிய மக்களிடமும் மசீச மன்னிப்பு கோரியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.








